Monday, August 27, 2007

மழை வெறித்த வானமாய்
என் மனம்
உன்னுடன் பேசிய மறுகணத்தில்
வானவில் வர்ணமாய்
உன் நினைவுகள் மட்டும்...
சிறு வயது முதலே
சிநேகிதம் கொண்டோம்
உனக்குள் ஒளிந்த
பாட்டியின் முகதேட்டல்
நிழலாய் தொடரும் இன்றும்...
உன் பிம்பம் தொடவே
நீர் இறைக்கிறேன் நித்தமும்
சலனமற்ற அதிர்வுகளில்
சந்தோஷம் கண்ட நினைவுகள்
நீங்குவதில்லை என்றுமே....

மனம் சோர்ந்த மாலைகளில்
ஒளி பாய்ச்சி என் உள்ளத்து
இருள் துடைத்து
மெளனியாய் கூறுகிறாய்
துணை நானென்று...

எனது சோகம், கண்ணீர்
சந்தோஷம் இப்படி
உணர்ந்த உணர்வுகளுக்கு
எல்லாம் என்றும்
நீ மட்டும் சாட்சியாய்...

மனம் கனத்த வேளையில்
கடந்து போன நியாபகங்களின்
மிச்சமாய் காணும் ஆவலில்
வெளிவந்தேன்
நீயற்ற வானம் வரவேற்றது...

மனம் மாறும் மனிதர்
நிறம் மாறும் பூக்கள்
நிஜம் தொலைக்கும் உறவுகள்
கண்டு நீயும் மறந்தாயோ
நம் நீண்ட கால நட்பினை?
நிலவே முகம் காட்டு...