Thursday, May 31, 2007

எத்தனை முயன்றாலும்
தவிர்க்க முடிவதில்லை
கப்பலிட்ட மழைநாளிலே
காலால் ஓடையில் துடுப்பிட்டு
மூழ்காத கப்பல் கண்டு
முழுக்க நனைந்த ஈரத்தினை...
கண்ணாடி வழியே
மழை ரசிக்கும்
மகனைப் பார்க்கையில்...

Thursday, May 24, 2007

யாரோ செய்கின்ற தப்பிற்கு
தண்டனைகள் மட்டும்
தவறாது எனக்கு...

நீ கண்ட காயங்களின்
வலிகளை என்னிடம்
வடுக்களாய் தேடுகிறாய்...

உனது அவமானங்கள்
எப்பொழுதுமே என் அழுகை
ருசிக்க தயங்குவதில்லை...

உனது ரணங்களை வேரறுக்க
என்னுள் விதைக்கிறாய்
அறுவடை ஆசையில்....

அத்தனையும் தூசியாய் தெரிகிறது
எப்பொழுதாவது நீ காட்டும்
அன்பின் முன்...

Monday, May 21, 2007

மனதிற்கு பசியெடுக்கிறது
எதை தின்றால் பசிதீரும்
என்று யோசித்து மடிகிறது மூளை...
சேர்த்து வைத்த உன் ஞாபகங்களை
சிறிது சிறிதாய் பிய்த்து
தின்ன ஆரம்பிக்கிறது மனசு..
எதுவுமற்ற வெறுமையில்
என்ன கிடைக்கும் என்று
தடுமாறும் மனதிற்கு
நீ அளித்த பிரிய உணவு ஏனோ
புசிக்கப் பிடிப்பதில்லை.....

Thursday, May 17, 2007

ஒரு நிமிடம் கூட பிரியாமல்
ஒன்றாகவே இருந்தோம்
அன்றில் பறவை
தோற்கும் வண்ணம்....

இன்றோ
ஒரு நிமிடம் என்னை நினைப்பாயா
என்ற வினா எழுப்பி
காத்து நிற்கிறேன்
வழி மாறிய செம்மறி ஆடாய்..

Monday, May 14, 2007

தேன்சிட்டு நீ என்று
புன்னகையோடு காத்திருந்தேன்
கடந்தையாய் கொட்டியென்
காதல் கொல்கிறாய்.....!!

Thursday, May 10, 2007

காத்திருந்த நாளெல்லாம்
காரணங்கள் அடுக்கினாய்
உனக்காக என்றறிந்தும்
உணராததது போல்
உயிர்வதை செய்தாய் !

காணாமல் போக துணிந்தபின்
காத்திருக்கிறேன் என்றுகூறி
கண்ணீரில் ஆழ்த்துகிறாய்
காயப்படுத்துவதன்றி வேரொன்றும்
அறியாயோ உயிரே!!

Wednesday, May 9, 2007

நீண்ட ஒரு இரவில்
நானும் என் தனிமையும்
தனித்து விடப்பட்டோம்
தன்னோடு இருந்த
தனிமை மறந்து,
உன்னோடு இருந்த
பொழுதுகளை அசை போட்டேன்
உன்னை போலவே
கோபித்துக் கொண்டோடியது
அலைபாயும் மனதை
துணையாய் விட்டு...

Monday, May 7, 2007

புல்லாங்குழலின் இசையாய்
புகுந்தாய் நரம்பினுள்
உறங்கிப் போன உணர்வுகள்
எழுப்பி தாளமிட வைத்தாய்..
கண்மூடி களித்திருக்கையில்
காணாமல் போனாய்..
இசை வந்த திசை அறியாமல்
விசையற்ற எந்திரமாய் நான்...

Sunday, May 6, 2007

நல்லதொரு நட்பென்று
நாளெல்லாம் மகிழ்ந்திருந்தேன்
புரிய வைக்க நீ கண்ட
சங்கடங்கள் சடுதியில் உணர்த்திற்று
புரிதல் இல்லா நட்பு நமதென்று
தளர்ந்து போகிறேன்....
தளைக்கும் முன் கருகும்
தளிர் ஞாபகத்தில்..

Saturday, May 5, 2007

மறந்தனையோ என்று மருகி
மனம் வாடும் நேரங்களில்
வலிந்த புன்னகை என்னுள்
வாசமற்ற மலர் போல...

கோபங்கள் இருக்குமோ என்று
குழம்பி தவித்து விடைக்காய்
எஞ்சி நிற்கும் அத்தனை
வேலைக்களுக்கு இடையிலும்...

எதிர்பாரா பொழுதினில் செவி
எட்டும் உன் குரலால்
நெகிழ்ந்து பொங்கும் உணர்வுகளை
ஒப்படைக்க வார்த்தைகள் தேடுகிறேன்...

Tuesday, May 1, 2007

புரிதல் இல்லா வாழ்வுதனில்
மெளனம் பழகுகிறோம்
நாட்களை கடத்தி விட..
நாளும் வளர்பிறையாயிற்று
நாம் கொண்ட மெளனம்....

தக்க தருணம் அமையுமென
காத்து நிற்கிறோம்
காதலை உள்ளடக்கி..
முட்டி மோதி உடைத்திட
வழி தேடி அலைந்திடும்...
தாங்க இயலா நொடியொன்றில்
உன் மெளனத்தால் கலையும்
என் மெளனம்
எதிர்பாரா சந்திப்புகள் ஏனோ
எதிர்கொள்ள முடிவதில்லை சுலபத்தில்
நீ தான் என்று அறிந்தாலும்
நான் தான் என்று அறியதரவில்லை.

சந்தர்ப்பங்களின் சதி என்று
சமரசம் செய்தாலும்
நட்பென்ற பெயரில்
நரம்பினில் புகுந்த வேதனை
உள் சென்று உயிர் வரை குத்தும்
உன்னோடு பேசும் பொழுதுகளில் எல்லாம்...