Wednesday, June 20, 2007

உயரத்தில் பிறந்து
உற்சாகமாய் ஆடி
உயிருக்குள் புகுந்து
எச்சத்தின் மிச்சமாய்
மண்ணுள் புதைந்து
காலம் கனிய
கண்மூடி கனா கண்ட
ஒருநாளில்...
சிறுதுளியின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைத்தென்னை
உயிர்த்திருக்கிறேன் என்று
உணரவைத்தது...
உயிர் துடிக்க
உருப்பெறுகிறேன்
புதிதாய்
புதிய தாயாய்
அகன்று உயர்ந்த என்னை
அதிசயித்து பார்க்கிறேன்!
மலர்ந்து பூரணமடைந்த வேளையில்
கனி சுமந்து காத்திருக்கிறேன்
என் போல் ஒரு உயிர்
என்னில் இருந்து உருவாக...
விண்ணில் தேடுகிறேன்
இரைதேடும் பறவையை..

Tuesday, June 12, 2007

எட்டா தூரத்தில் நீ இருந்தாலும்
எட்டும் உன் குரலில் மகிழ்ந்து
என்னை மறக்கும் தருணத்தில்
ஒற்றையா இரட்டையா என்று
வினா தொடுத்து விதியின் பெயரில்
வெற்று சண்டை எய்கிறாய்..
என்னுள் நான் நொறுங்குவதை
உணராத காற்றாய்
கடந்து செல்கிறாய்..
என் முகத்தில் அறைந்த வண்ணம்...

Sunday, June 10, 2007

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...

முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..

யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

Saturday, June 2, 2007

நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது நட்பு..
நீயற்ற என் நாட்கள்
நிர்பந்தத்தோடு நகர்கின்றன...

காற்றாய் வந்தாய்
கனவாக உறைந்தாய்
காலம் கடந்திட்டாலும்
காயாது நட்பின் பசுமை...

வாழ்வின் நிதர்சனத்தில்
வழி மறந்த பறவையாய்
வலியோடு பறக்கிறோம்
வனாந்திரத்தில் தனித்திருக்கும்
நம் நட்பை காணாதது போல்...