Saturday, February 24, 2007

காத்திருப்பு சுகம் என்று
கருத்தில் பதித்தேன்
ஆரம்ப நாட்களில்....

இன்று, நாளை
என்று இழுத்தடிக்கிறாய்
நமது சந்திப்பை..

புன்சிரிப்போடு உனது
காரணங்களை ஆராயாமல்
கடக்கிறேன்..

வருடங்கள் ஓடிய
பின்னும் ஏனோ
வர யோசிக்கிறாய்..

நேசிக்கிறாய் என்பதால்
நானும் வருத்தம்
தவிர்க்கிறேன்..

காத்திருப்பு கொடுமை என்று
கருத்தில் கொண்டு
இன்றும் கூட காத்திருக்கிறேன்..

வழக்கம் போல் நீ வராது
கேட்கப் போகும்
மன்னிப்பிற்காய்...

Friday, February 23, 2007

உற்சாகமாய் உணர்ந்தேன்
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....

Wednesday, February 21, 2007

நினைவுகளில் கலந்து
நீங்காது நின்றாய்
நெஞ்சில்...

அவசர சாரலாய்
சட்டென வந்து
பட்டென்று ஒட்டிக்கொண்டாய்

எத்தனை முறை
துவட்டிய போதும்
துளியின் மிச்சமாய்
என்னுள் ஒரு ஈரம்...
விடை கேட்டு விரட்டிக்கொண்டே...

Friday, February 16, 2007

வேஷமென்று என்னை இகழ்ந்திட்டாய்..
வேல்கொண்டு நெஞ்சினில் பாய்த்திட்டாய்..
வேதனை மிக செய்திட்டாய்..
வெஞ்சினம் கொண்டு பழித்திட்டாய்..
வேண்டாம் என்று விலக்கிட்டாய்..
வேள்வியில் இட்டு பொசுக்கிட்டாய்..
வேகும் மனமென்று அறியாயோ?

Thursday, February 15, 2007

அழைத்தாயா என்று கேட்டாய்
ஆமென்று சொன்னால் தான்
அறியாவாயோ விளிக்கும் மனது!
உனக்காக பதிலிருத்தேன் "தினமும்"!
உண்மையில் ஒவ்வொரு நொடியும்
உன்னை அழைக்கிறேன் உணர்வாயா?
என்றாவது என்னவென்று கேட்க
என்னருகே வருவாய் என
எண்ணியாவாறு காத்திருக்கிறேன்..

Sunday, February 11, 2007

புரிந்த போதும்
புதிராய் சில கேள்விகள்
உன்னிடம் இருந்து...
துவண்டு போவேன்
என்று அறிந்தும் கேட்கிறாய்..
கேட்காதிருப்பது நலம் என்று
அறிய மறந்தாயா? அன்றி
அழுகை ரசித்தாயா?
சங்கடங்கள் இருப்பினும்
சந்திக்க வந்தேன்.
என் பார்வை புரியாது
ஏதோ கூறினாய்..
விடைபெறும் போதும்
எதிர்பார்த்தேன் கேட்பாயென..
இறுதி வரை கேட்கவில்லை
"எப்படி இருக்கிறாயென..."

Saturday, February 10, 2007

கண்ணீர் காண
காலம் தாழ்த்துகிறாய் என்றால்
உரைத்திடு ஓர் வார்த்தை.
உனை பிரிந்த நாட்கள்
உயிர் வலி தந்திட
விழி நீர் கண்டுவிடும்.
வாராமல் வதைக்காதே அன்பே!

Thursday, February 8, 2007

எனக்கு தெரியும்
எப்பொழுதோ நீ
என்னை கடந்து விட்டாய்
என்று...
எனினும் அன்பே..
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
என் மனம்
ஏனென்று புரியாது நான்!
எப்பொழுதும் புதிராய் நீ!!
ஞாபகங்கள் சிறகடிக்கும் போதும்..
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !

Sunday, February 4, 2007

பல நட்புகளை காணும் பொழுது
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..

தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…

வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…

பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…

நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !

இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…