Sunday, March 25, 2007

புரியாத நட்பொன்று
புதிராக நிற்கும்...
பல நாட்களாய்
பழகியவிடத்தும்..!

காரணமற்ற கதைக்கு
பொருப்பற்ற கோபங்கள்
சீண்டிப் பார்க்கும்
நம் நட்பை..

அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..

அறிந்த போதும்
அழகான கேள்விகள்
விடை இல்லாது
விசும்பும் மனம்...

போ என்று கூறி
போகாமல் காத்திருக்கும்
உன் மேல் படர்ந்த
உனக்கான என் நட்பு...

Thursday, March 22, 2007

காத்திருப்புகள்
கணிசமாய்உயர்ந்து கொண்டே...
எனக்காய் நீயும்
உனக்காய் நானும்
காத்திருப்பது
அறிவோம் நீயும், நானும்
ஏனோ போலியாய்
இருவருமே...

Saturday, March 17, 2007

அவசர உலகில்
அனாவசியமாய் நேரம் இழந்து
சண்டைகளுக்கான காரணங்களை
சடுதியில் தேடி களிப்புறுகிறாய்...!

வாய்புக்காய் தவம்புரிந்து
வாழ்க்கை தொலைக்கிறாய்..
வரைமுறைகள் காட்டி
முயலுக்கு கால் மூன்றென்கிறாய்

எத்தனையோ முறைகள்
முயன்றும் முடியாமல் விழிக்கிறேன்...
தூங்குவதாய் பாவனையில் இருக்கும்
உன்னை எழுப்ப இயலாமல்!

Tuesday, March 13, 2007

அடிக்கடி நான் அழைத்தபோதும்
என்றுமே நீ இருப்பதில்லை
என்னவென்று கேட்பதற்கு..

இன்றும் அப்படித்தான்
என்று அறிந்தபோதும்
அழைக்கத் துடிக்கும் மனம்..

என்னவாகிறேன் நான் என்று
விதிர்த்துப் போகிறேன்
விடைதருவாயோ என் விலாசமே?

Thursday, March 8, 2007

துன்பங்கள் கண்டாலும்
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!