Wednesday, August 6, 2008

விளையாட்டு - 4.
தத்தைக்கா

கைகள் மட்டும் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்களில் இது முதன்மை வாய்ந்தது என்றே கூறலாம். சிறார் கூடி அனைவரும் கைகளை தரையில் பரப்பி ஒருவர் மட்டும் ஒவ்வொரு கையாய் பாடிக்கொண்டே தொட்டு செல்வர், பாடல் முடியும் போது யார் கையை தொடுகிறோமோ அவர் கையை எடுத்து விடுவர். அப்படி ஒரு நபர் இரு கையும் எடுக்கப்பட்டால் ஜெயிப்பர். அந்த பாட்டு பின்வருமாறு.
தத்தக்கா புத்தக்கா
தவளை சோறு
எட்டு எருமை,
எருமை பாலு
தூக்க மரத்துல துணியக் கட்டி
கூப்பிடுங்க குலவுடுங்க
குறத்தி மக்கள கையெடுங்க...

இதில் கையெடுங்க என்று ராகத்தோடு முடிப்பதே தனி அழகு தான். பல காலம் தொட்டு இன்று வரை கிராமங்களில் சிறு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு. இந்த ஆட்டத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால், ஆறு பேருக்கு மேல் இருந்தால் கொஞ்சம் சிரமம்தான். இதில் யார் தத்தக்கா புத்தக்கா பாடுகிறார் என்பது முக்கியம். சிலர் வேண்டுமென்றே கை... எ... டு...ங்..க என்று நீட்டி முழக்கி வேண்டியவருக்கு உதவவும் முடியும். :-) இந்த ஆட்டத்தின் அடிப்படை என்னவோ சின்னக் குழந்தைகளுக்கு தொடச்சியாக புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதுதான் என்று தோன்றுகிறது. புதிதாகப் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் இந்த ஆட்டத்தை கூர்ந்து கவனித்து புதிதாகக் கற்றுக் கொள்வார்கள் இந்த வார்த்தைகளை. தத்தக்கா புத்தக்கா என்று பேசும் குழந்தைகளும் தத்தைக்கா புத்தைக்கா விளையாடி இலகுவாக பேச ஆரம்பித்து விடுவர்.

விளையாட்டு - 5.
குத்து விளையாட்டு

இந்த விளையாட்டு இருவர் மட்டுமே பங்குபெறும் ஒரு விளையாட்டு. ஒருவர் இரு கைகளையும் சேர்ந்தாற் போல வைக்க மணிக்கட்டு பகுதி ஒருங்க, விரல் பகுதி விரிந்து ஒரு வாயில் போல வைக்க அதாவது பந்தை பிடிக்க வைத்திருப்பது போல, மற்றவர் தன் விரல்கள் மடக்கி குத்த ஆரம்பிப்பர்.
அம்மா குத்து
அப்பா குத்து
மா குத்து
மஞ்ச குத்து
மகிழங்குத்து
பிள்ளையார் குத்து
பிடி குத்து
இப்படி பல குத்துக்களை விட்டு பிடி குத்து சொல்லும் போது போது கையை விரித்து குத்துக்களை பெறுபவர் அந்த கையை பிடித்து கொள்ள வேண்டும். இது போன்ற விளையாட்டுக்கள் குழந்தைகளின் கவனிப்பு திறனை அதிகரிக்கிறது. எப்போ பிடி குத்து சொல்வார்கள் என்று கவனமாய் இருப்பார்கள். ஏனெனில் மாத்தி மாத்தி விருப்பம் போல் சொல்லலாம். மா குத்து சொல்லி விட்டும், உடனே பிடி குத்து சொல்லலாம். மேலும் கைகளுக்கு இது நல்லதொரு பயிற்சியும் கூட.

விளையாட்டு - 6.
கொக்கு பறபற
கொக்கு பறபற என்பதும் ஒரு சிறு விளையாட்டு தான். சந்திரமுகி படத்தில் வரும் பாடலை பார்த்ததும் இந்த விளையாட்டு தெரிந்தவர்களுக்கு நினைவுக்கு வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்குபெறலாம். அனைவரும் வட்டம் அமைத்தமர்ந்து, ஒருவர் மட்டும் ஒவ்வொரு பறவை மற்றும் சில பெயர்களை கூறி பறபற என்று கூறுவர். கூறப்பட்டது பறவையாய் இருக்கும் பச்சத்தில் பறப்பது போல் இரு கைகளையும் முகத்தின் முன்பு வைத்து விசிறுவது போல் மற்றவர்கள் கையசைக்க வேண்டும், உதாரணமாக நாய் பறபற என்று கூறினால் கையசைக்க கூடாது. அப்படி தன்னை மறந்து அசைப்பவர் தோல்வி அடைவர். இது கூட கவனிப்பு திறன் மற்றும் கைகள் பயிற்சிக்கு ஏற்றதொரு விளையாட்டு.
எ.கா :
கொக்கு பறபற
கோழி பறபற
மைனா பறபற
சேவல் பறபற
செவந்தி பறபற..
கவனிக்க செவ்வந்தி பூ பறக்காது. இதற்கு கையசைத்தால் அவர் தோற்றவர் ஆவர். சமயத்தில் வானம் பறபற என்று கூறி சிலர் வானம் பறக்காது என்றும், சிலர் மேகத்த பாரு பறந்து போகுது என்றும் விவாதிப்பர். இதே போல் தான் பச்சை பாம்பையும்.. ஏனெனில் பச்சை பாம்பு பறந்து வந்து கண்ணை கொத்தும் என்று நம்பியதால்.. :) இப்படியாக விவாதம் செய்யும் பழக்கம் கூட அப்போதே ஆரம்பித்து விட்டது.
நாம் ஆடிய ஒவ்வொரு விளையாட்டுக்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாகவே இருந்தது எனலாம்

No comments: