Tuesday, August 5, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

முதன் முதலாய் எனக்கு அறிமுகமான விளையாட்டு. :-)

விளையாட்டு - 1
பருப்பு கட
பருப்பு கட பருப்பு கட என்று உள்ளங்கையை பள்ளமாக்கி அதில் கை முட்டினால் கடைவது போல் செய்து பின் ஒவ்வொரு விரலாய் " இது சோறு, இது குழம்பு, இது பொரியல் , இது அவியல், இது அப்பளம்' என்று ஐந்து விரல்களுக்கும் கூறி அத்தனையும் கொஞ்சம் எடுத்து நடு கை பகுதியில் இட்டு பிசைந்து பின் "இது அம்மாக்கு, இது அண்ணாவுக்கு , இது அக்காவுக்கு,இது மாமாக்கு இப்படி அக்கம் பக்கம் இருப்பவர்" எல்லாம் கூறி இறுதியில் அப்பாவுக்கு கொண்டு செல்லும் வழி எங்கே என்று தேடி அலைந்து பின்னர் "இந்தோ இருக்கு" என்று விரல் முடிவில் இருந்து மேல்நோக்கி ஊர்ந்தவாறே
" நண்டூறுது நரியூறுது கல்லூறுது மண்ணூறுது" என்று கூறிக்கொண்டே.. அக்குள் வரை சென்று "கிச்சு கிச்சு" மூட்டி அந்த குழந்தை கெக்கே புக்கே என்று சிரிக்கும் அழகில் நாமும் சிரித்து... அருமையான சின்ன விளையாட்டு இது.
இந்த விளையாட்டுக்கள் உறவுமுறைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தவும் உதவுவதாய் நான் நினைக்கிறேன். மேலும் இந்த விளையாட்டு வீட்டினுள்ளிருந்தே விளையாட உகந்தது. இந்த விளையாட்டு பெரும்பாலும் மழலையர்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் . இந்த ஆட்டத்திற்கென்று பிரத்யோகமாக எதுவும் தேவை இல்லை.

விளையாட்டு - 2
சங்கு சக்கரம

இதுவும் ஒரு சிறு விளையாட்டு வகைதான். குழந்தைகள் கூடி அனைவரும் தங்கள் இரு கைகளையும் தரையில் பரப்பி ( உள்ளங்கை தரை நோக்க ) ஒருவர் மட்டும் சங்கு,சக்கரம்,ங்கு, நாகம்,பால் என்று ஒவ்வொரு விரலாய் எண்ணி பால் என்றும் முடியும் விரலை மடக்கி கொள்வர்.அப்படியாக ஒரு கையில் அனைத்து விரலும் மடக்கப்பட்டால் அவர் ஜெயிப்பர். இது சுற்று போல வரிசையாக எண்ணப்படும் ஒரு விளையாட்டு .
இந்த விளையாட்டுக்கும் தனியாக ஏதும் தேவையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பொழுதில் இந்த ஆட்டத்தை ஆட முடியும். இதுவும் உள்விளையாட்டுதான். சங்கு சக்கரம் என்றெல்லாம் சொல்லி விளையாடுவது தமிழ் வார்த்தைகளை மனதில் கொள்ளச் செய்யும் எளிய உபாயமாகத்தான் படுகிறது.

விளையாட்டு - 3
மூக்குபொடி
இந்த விளையாட்டில் இருவர் பங்குகொள்வர். ஒருவர் சாமி கும்பிடுவது போல கைகுவித்து வைத்திருக்க , மற்றவர் கைகளின் நடுவில் இருந்து மூக்குபொடி எடுத்து மூக்கில் வைத்து போடுவதாய் ஒரு பாவனை செய்து, சடாரென கைகளில் அறைவர். அதை உணர்ந்து சுதாரித்து கையை நாம் எடுத்து விட வேண்டும். அப்படி அறைபட்டால் மறுபடியும் அடிபட்டவர் கைகுவித்து வைக்க வேண்டும்.. அடி தப்பினால் அவர் கைகுவிக்க விளையாட்டு தொடரும்..
இந்த விளையாட்டு உடல் உறுப்புகளின் அசைவை ஊன்றி கவனிக்க ஏதுவான ஆட்டம். ஆங்கிலத்தில் ரிஃப்ளெக்ஸ் என்று சொல்வாரக்ளே, அதனைச் சோதிக்கும் பயிற்சியாகத்தான் இதனை சிறார்களுக்குப் பெரியவர்கள் சொல்லித் தந்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் கை அசைவை கவனிப்பதில் ஒருக்கம் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்

No comments: