Saturday, August 9, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு - 10
புத்தக கிரிக்கெட்


புத்தகங்கள் உதவியுடன் வீட்டினுள் ஆடும் கிரிக்கெட் தான் புத்தக கிரிக்கெட். இருவர் அமர்ந்து புத்தகத்தை மூடி திறக்கும் போது வரும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆடுவார்கள். எத்தனை இலக்க எண்ணாக இருந்தாலும் எண்ணின் இறுதி எண் கணக்கில் எடுக்கப்படும். உதாரணமாக 186 என்றால் 6 என்பதை கணக்கில் எடுத்து சிக்ஸர் என்று மகிழ்ந்து கொள்ளலாம். இதில் சைபர் வந்தால் ஆட்டம் அம்பேல்.. தோற்றதாய் அர்த்தம். அதாவது 140 என்றால் 0 கணக்கில் கொண்டு ஆட்டம் இழந்தவர் ஆவார். இப்பொழுது எல்லாம் கிரிக்கெட் அட்டைகள் சேர்த்து இந்த கால வாண்டுகள் விளையாடுகின்றார்கள். அது போல மல்யுத்த வீரர்களின் பட அட்டைகளும் சேர்த்துக் கொண்டு இதுபோல விளையாடுவார்கள்.

விளையாட்டு - 11
எந்தப் பக்கம்

இதுபோல புத்தகம் உதவியுடன் ஆடும் மற்றொரு விளையாட்டு "எந்த பக்கம்" என்னும் விளையாட்டு. இருவர் அமர்ந்து புத்தகம் திறக்கும் முன்னர் யாருக்கு எந்த பக்கம் என்று தீர்மானித்து பின்னர் திறக்க வேண்டும். இல்லையென்றால் முதல் பக்கத்தில் இருந்து அடுத்த பக்கம் போகும்முன் யாருக்கு எந்த பக்கம் என முடிவு செய்து பின் திறப்பார்கள். அதில் வரும் படங்களை வைத்து கற்பனையால் தொடரும் விளையாட்டு இது. உதாரணமாக ஒருவருக்கு வந்த பக்கத்தில் புலி மற்றவருக்கு வந்தது பூனை என்றால் புலியை வைத்துக்கொண்டு நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று ஜம்பம் அடித்துக் கொள்வார்கள். இப்படியே அந்த கற்பனை சின்ன சண்டையாய் கூட வளர்ந்து விடும். அதே ஒரு கார் என்றால் என்கிட்ட கார் இருக்கும் காரில் அங்க போவேன் நீ சைக்கிளில் வந்து என்னை பிடிக்க முடியாது என்ற ரேஞ்சில் போகும் விளையாட்டு.

விளையாட்டு - 12
என்ன பிடிக்கும்

என்ன பிடிக்கும் என்பதும் மேலே கூறிய படியான கற்பனை வளத்தை வளர்க்க உதவும் விளையாட்டு தான். இது ஒரு வார்த்தை விளையாட்டு. இதில் இருவர் பங்குகொள்வர். நானும் என் அண்ணாவும் ஆடியதால் இருவர் மட்டுமே ஆடி பழகி விட்டோம்.. எங்களுக்கு உணவு உண்ணும் போது இதுதான் பொழுதுபோக்கு.. பேசாமல் சாப்பிட சொல்லி திட்டு விழும். யார் கேட்டார்கள் திட்டையெல்லாம்... எங்கள் சுவாரசியம் விளையாட்டில் தான் இருக்கும்.
ஆட்டம் என்னவென்றால் ஏதாவது இரண்டு பொருள் மனதில் நினைக்க வேண்டும்.. கொஞ்சம் சம்பந்தம் இருக்க வேண்டும் இரண்டு பொருட்களுக்கும். பொருளின் முதல் எழுத்துக்களை நினைத்தவர் கூற வேண்டும். மற்றவர் அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.. அதன் பின் மேலே கூறிய பக்கம் விளையாட்டு போல கற்பனை விளையாட்டு தான்.
உ.தா: மனதில் கொண்டது ஆலமரம், மாமரம் என்று வைத்துக் கொள்வோம். என்ன கேட்க வேண்டுமென்றால்..
" உனக்கு ஆ பிடிக்குமா மா பிடிக்குமா"
பதில் : ஆ என்றால் ....
முதல் நபர் நினைத்ததை கூற வேண்டும்...
" அப்போ உனக்கு ஆலமரம் எனக்கு மாமரம்."
அதன் பின் ஆரம்பமாகும் விவாதம்.. நான் மாங்காய் சாப்பிடுவேன்.. நான் ஊஞ்சல் ஆடுவேன் என்று.. சில சமயம் நானும் என் அண்ணாவும் சமரசம் செய்து கொள்வோம்.. சரி நான் உனக்கு மாங்காய் தருகிறேன் அதுக்கு பதில் நான் ஊஞ்சல் ஆடிக் கொள்வேன் என்று.. (என்னமோ நிஜமாகவே அது நம்முடையது என்னும் ரீதியில் இருக்கும் எங்கள் விவாதம்.)
இதில் மனதில் நினைத்ததை வேண்டுமென்றே மாற்றும் அபாயம் உண்டு.. ஆ என்றால் ஆவாரச் செடி என்றும் மாற்றி விடலாம்.. இது அவரவர் திறமையைப் பொறுத்தது. ;) நான் அடிக்கடி என் அண்ணாவை மாற்றி விட்டான் என்று சண்டை பிடிப்பது வாடிக்கை. :)
இங்கே கூறிய விளையாட்டுக்கள் சும்மா நேரப் போக்கிற்கு என்றாலும்.. கற்பனை வளம் மிகுந்து இப்படி பிற்காலத்தில் எழுத ஏதுவாய் இருக்கும். :)

No comments: