Thursday, August 7, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

இந்த இழையில் இடம்பெறும் விளையாட்டுக்களில் இருந்து ஏதேனும் பொருளை உபயோகப்படுத்துவதாய் அமைந்திருக்கும். காகிதம், கல், உடைந்த வளையல் இப்படியாக...

விளையாட்டு - 7

உருண்டை


உள்விளையாட்டில் ஒன்றான உருண்டை என்னும் விளையாட்டு ஆட ஒரு சிறு பொருள் வேண்டும், காகித துண்டு அல்லது ஏதேனும் சிறு பஞ்சோ ஏதாவது கைக்கு அடக்கமாய். அனைவரும் சுற்றி அமர்ந்து ஒருவரை மட்டும் குனிய வைத்து முதுகில் அனைவரும் கையை பரப்பி கொள்வார்கள். ஒருத்தர் மட்டும் எண்ணிக்கொண்டே ஒவ்வொரு கையாய் அந்த காகித துண்டை வைத்து எடுப்பர்.(ஒரு கையில் வைத்து விட்டு இன்னும் வைக்காதது போல சுற்றி சுற்றி எண்ணி குனிந்தவரை முட்டாளாக்க முயல்வதும் உண்டு).பின்னர் ஒரு கையில் வைத்துவிட்டு அனைவரும் ஒரு சேர கையை எடுத்து விடுவார்கள் . பின்னர், இரு கைகளையும் சாமி கும்பிடுவது போல் குவித்து மேலும் கீழுமாக தேய்ப்பார்கள் .

உருண்டை தருண்டை என்று கூறிக்கொண்டே தேய்ப்பார்கள்.

ஒரு கை கீழே ஒரு கை மேலே என்ற ரீதியில் . இதில் யாரோ ஒருவரிடம் அந்த காகித தக்கை இருக்கும் . அதை தான் குனிந்தவர் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி நாங்கள் விளையாடும் போது வாண்டுகள் இது தான் சாக்கு என்று குனிந்து அருகிலிருப்பவர் மடியில் தூங்கி விடுவர்...(நானும் தான்) கண்டுபிடிக்க கூடாதென்று அத்தனை நேரம் உருட்டினால் என்ன பண்ணுவதாம். எழுந்து திரு திரு வென விழித்து பின்னர் ஒவ்வொரு கையாய் ஆராய்ந்து அதிலும் என்னமோ காகிதம் கீழே விழ போக அதை தடுத்து திரிப்பது போல் பாவனை எல்லாம் செய்வர். தவறாக கூறினால் மறுபடியும் குனிய வேண்டும் ..

தூங்காது நன்கு கவனித்து சரியாக கண்டுபிடித்தால் மாட்டியவர் குனிய வேண்டும். கவனிப்பு திறனை தான் இந்த ஆட்டமும் வளர்க்கிறது .. நாங்கள் ஆடும் போது சில ஆத்மாக்கள் உதவுவது போல தவறாக கண்ணை காட்டுவார்கள்.. நாமும் அதை நம்பி கை காட்ட.. ங்னே என்று முழிக்க வேண்டியதாய் இருக்கும். படு தமாஷான விளையாட்டு இது.

விளையாட்டு - 8

ஜோடி சேர்த்தல்

இந்த விளையாட்டு சிறுமகளிர் உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு விளையாடும் வகையறா. உடைந்த கண்ணாடி துண்டுகளை சேகரித்து அதை எல்லாம் ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி வைப்போம்.. சில நேரங்களில் சிறிது கீறல் விட்ட வளையலையும் ஆட்டத்திற்கு பயன்படுத்தும் பொருட்டு துண்டாக்குவது உண்டு. அதுவும் ஜோடி ஜோடியாக வருமாறு உடைப்போம்.இப்படியாக கலர் கலராய் சேர்த்த வளை துண்டுகளை எல்லாம் ஒருங்கே கையில் எடுத்து பின் சிதறடித்து ஜோடி துண்டுகளை மட்டும் சேர்த்து எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் போது மற்ற வளையல் துண்டுகள் மீது படாமல் எடுக்க வேண்டும். அது தான் ஆட்டமே.

இப்படி வளையல் எல்லாம் சேர்த்து கலைடாஸ்கோப் செய்வதும் உண்டு.. சதுர நீள குழாய் போன்ற அமைப்பில் அட்டையை வெட்டி ஒட்டி உருவாக்கி அதனுள் கண்ணாடி துண்டுகளை எல்லாம் போட்டு கலர் பேப்பர் ஒட்டி அழகு படுத்தி அதனில் நம் விழி பதித்து பார்க்கையில் கலர் கலர் பூக்கள் விரிந்து மாயம் காட்டிடும்.. நான் ஏனோ அதை முயற்சிக்க வில்லை. விதம்விதமாக வண்ணக் கோலங்களாய் விரிந்து மனதை அள்ளிக்கொள்ளும்.. சிறு வயதில் அதை பார்க்க நடக்கும் போட்டி இருக்கிறதே... அதெல்லாம் ஒரு காலம்.. :)

No comments: